×

டாக்டர் சி.ஏ.நெல்சன் ஜேசுதாசன், இயக்குநர், ஜோசப் கண் மருத்துவமனை, திருச்சி.

தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை  விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல், நித்திய ஜீவனை  அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.  யோவான் 3:16  கிறிஸ்துமஸ் என்றாலே நம் மனதிற்கு வருபவை மகிழ்ச்சி தரும்  கொண்டாட்டங்கள், வெகுமதிகள், வண்ண வண்ண விளக்குகள், விருந்துகள் போன்றவையே.  ஆனால் இவை அனைத்தும் குறுகிய கால மகிழ்ச்சி தருபவை. நமக்காக நம்முடைய  பாவங்களில் இருந்து விடுதலை தர, நித்திய ஜீவனை நமக்கு அளிக்க இவ்வுலகத்தில்  இயேசு பாலன் பிறந்தார் என்கிற நற்செய்தியே நமக்கு நிரந்தர மகிழ்ச்சி தரும்  அன்பின் செய்தி.

இந்த உலகத்தில் இன்றைய காலகட்டத்தில் உண்மையான  அன்பைத்தேடி அலைபவர்கள் அநேகர். அன்பற்ற சூழ்நிலையிலேயே வாழ்ந்து  வருபவர்கள் பலர். தவறு செய்பவர்கள் குற்ற உணர்வோடு அதிலிருந்து விடுபட  முடியாமல் மேலும் மேலும் தவறு செய்து இழந்து வாடுகின்றனர்.
இயேசு  அனைவரையும் நேசிக்கிறார். பாவிகளை மிகவும் நேசிக்கிறார். பாவத்தை  வெறுக்கிறார். அவருடைய ரத்தம் பாவத்திலிருந்து விடுதலையை  பெற்றுத்தருகிறது. நாம் பாவத்திலிருந்து விடுபட்டு உண்மையான மகிழ்ச்சியை  பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இயேசு இவ்வுலகத்திற்கு வந்தார்.  அவருடைய அன்பு மாறாதது. ஜாதி, மதம், மனம் கடந்து அனைவருக்கும் பொதுவானது.  அவர் நம்மைப்போல் வாழ்ந்தார். அவர் பாவம் செய்யவில்லை. பரிசுத்தமுள்ள தேவன்  அவரை நோக்கி வேண்டிக்கொள்ளும் அனைவருக்கும் பாவத்திலிருந்தும், குற்ற  உணர்விலிருந்தும் விடுதலை அளிக்கிறார்.

நம்மை அளவு கடந்து நேசிப்பதால்  தன்னையே தியாகமாக ஈந்தார். நாம் தேடும் நிம்மதி அவரிடத்தில் இருக்கிறது.  அவர் சகலத்தையும் செய்ய வல்லவர். தகப்பனிடம் ஒரு பிள்ளை தன் தேவைகளை  சொல்வது போல் நாமும் இயேசுவிடம் நம் தேவைகளை சொல்லலாம். நமக்கு உதவி  செய்ய இயேசு காத்திருந்கிறார். பாவத்தை அறிக்கையிடும் யாவருக்கும், நமக்காக  பாவத்தின் தண்டனையை சிலுவையில் ஏற்றுக்கொண்ட  இயேசு பாவத்திலிருந்து  விடுதலை அளித்து மகிழ்ச்சியில் நம்மை நிரப்புகிறார். நமக்கு நித்திய வாழ்வு அளிக்கிறார். இந்த அன்பை மகிழ்ச்சியை இயேசுவிடமிருந்து பெற்றுக்கொண்ட  நாமும், நம்மைப்போல மற்றவர்களையும் நேசித்து இயேசுவின் அளவற்ற அன்பை  வெளிப்படுத்த ஆண்டவர் நமக்கு உதவி செய்வாராக!  உங்கள் அனைவருக்கும் எங்கள்  கிறிஸ்துமஸ், புது வருட வாழ்த்துக்கள்.

Tags : CA Nelson Jesudasan ,Trichy ,Joseph Eye Hospital ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...