கரூர், டிச. 25: கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் இருந்து உழவர்சந்தை செல்லும் சாலையோரம் கனரக வாகனங்கள் நிறுத்தம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. கரூரில் இரூந்து திருச்சி, திண்டுக்கல் போன்ற பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வகையான வாகனங்களும் உழவர்சந்தை, லைட்ஹவுஸ் கார்னர் வழியாக செல்கிறது. இந்த சாலையின் இருபுறமும் பொதுமக்கள் அதிகளவு வந்து செல்லும் தனியார் மருத்துவமனைகள் உள்ளன.இந்நிலையில், நெருக்கடியான இந்த சாலையோரம் சில சமயங்களில் வேன், லாரி போன்ற வாகனங்கள் நிறுத்தம் காரணமாக மற்ற வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத நிலை நிலவி வருகிறது. எனவே, துறை அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு கனரக வாகன நிறுத்தத்தை பார்வையிட்டு தேவையான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என வாகனஓட்டிகள் மற்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.