பொன்னேரி, டிச. 25: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கடந்த 9ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. தற்போது தேர்தல் தேதி நெருங்கி வரும் தருணத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்கள் மூலமாகவும், அதற்காக பணி செய்த அதிகாரிகள் மூலமாகவும் ஏராளமான குப்பைகள் அலுவலக வளாகத்தில் குவிந்துள்ளன.
மேலும் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் தண்ணீர் பாட்டில்களும், உணவு பொட்டலங்கள் கொண்டு வரப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளும் நிரம்பி வழிகிறது. மீதமான உணவு பொட்டலங்களை சாப்பிட கால்நடைகளும் அதிகமாக நுழைகின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கழிவுகள் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வருவோர் போவோரை கடித்து வருகிறது.
இதனால் பொதுமக்களுக்கு தொற்று நோய் உள்ளிட்ட சுற்றுப்புற சுகாதார கேடு ஏற்படும் நிலையில் இப்பகுதி மாறிவருகிறது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுற்றுப்புற சுகாதாரத்தை பராமரிக்கும் பொறுப்பில் உள்ள மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நிலவும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.