திருவள்ளூர், டிச. 25: ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி ‘பூத் சிலிப்’ வழங்கும் பணியில் ஊராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் என 3,924 பதவிகளுக்கு 13,355 பேர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் மொத்தம் 2,577 வாக்குச் சாவடி மையங்களில் 13,56,639 பேர் வாக்களிக்க உள்ளனர். இவர்களுக்கு ‘பூத் சிலிப்’ வழங்கும் பணி நடந்து வருகிறது. ஊராட்சி ஊழியர்கள் வீடு வீடாக வாக்காளர்களை தேடி சென்று ‘பூத் சிலிப்’ வழங்கி வருகின்றனர்.
இப்பணியில் ஊராட்சி செயல் அலுவலர்கள், கிராம உதவியாளர்களை பயன்படுத்தி ‘பூத் சிலிப்’ வழங்கப்பட்டு வருகிறது. வாக்காளர்கள் தங்களது ‘பூத்’ சிலிப் தொலைந்து விட்டாலும் அச்சப்பட தேவையில்லை. ஆதார், டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், வங்கி அல்லது அஞ்சலக கணக்கு புத்தகம் உட்பட 11 ஆவணங்களை பயன்படுத்தி ஓட்டு போடலாம்.
குறிப்பிட்ட 11 ஆவணங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் ஆணையம் ‘பூத்’ சிலிப் அச்சடித்துள்ளது. இது தவிர, ஓட்டு பதிவின்போது அனைத்து ஓட்டு சாவடிகளிலும் அருகில் ‘பூத்’ சிலிப் மையம் அமைக்கப்படும். ‘பூத்’ சிலிப் பெறாதவர்கள் அந்த மையங்களில் பெற்று கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.