×

நகராட்சி 10வது வார்டில் பாதாள சாக்கடையில் அடைப்பு

தர்மபுரி, டிச.24:தர்மபுரி நகராட்சியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கழிவுநீர் தேங்கி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தர்மபுரி நகராட்சி 10வது வார்டில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஹரிசந்திரன் தெருவில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டு 7 வருடங்கள் ஆகியும், இதுவரை பாதாள சாக்கடை திட்டம் முறையாக செயல்படவில்லை. மேலும், பாதாள சாக்கடை குழாய் சிறியதாக அமைத்ததால், வீடுகளில் இருந்து காலை நேரங்களில் அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்படும் போது பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்கிறது.  இது நாளடைவில் நிரந்தர அடைப்பாக மாறி, கழிவுநீர் ரோட்டில் எப்போதும் தேங்கி நிற்கிறது. இது தொடர்பாக நகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் செய்தனர்.

இதையடுத்து, கடந்த சில நாட்களாக பாதாள சாக்கடைக்காக அமைக்கப்பட்ட மேன்ஹோல் மூலம் அடைப்புகளை நீக்க, நகராட்சி ஊழியர்கள் முயற்சி செய்தும், அடைப்புகளை சரி செய்ய முடியவில்லை. தொடர்ந்து ஹரிச்சந்திரன் தெருவில், கழிவுநீர் காலை நேரங்களில் ரோட்டில் ஓடுகிறது. தேங்கும் கழிவுநீரில் புழுக்கள் மிதப்பதுடன், வீடுகளுக்குள்ளும் புழுக்கள் வந்து விடுவதால் அப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘ஹரிச்சந்திரன் தெருவில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பால், கழிவுநீர் ரோட்டில் தேங்கி நிற்கிறது. இது தொடர்பாக பலமுறை கமிஷனரிடம் புகார் செய்தும், நிரந்தர தீர்வு ஏற்படாமல் உள்ளது. எங்கள் தெருவில் பாதாள சாக்கடை தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளதால், மெயின்ரோட்டில் உள்ள பிரதான குழாயில் செல்லும் கழிவுநீர், ஹரிசந்திரன் தெருவிற்குள் புகுந்துவிடுகிறது. தேங்கி நிற்கும் கழிவுநீரால் இப்பகுதி மக்களுக்கு அடிக்கடி காய்ச்சல், வயிற்று போக்கு போன்ற பாதிப்பு ஏற்படுகிறது.  எனவே, பாதாள சாக்கடை திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும். எங்கள் தெருவில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Tags : Municipal 10th Ward ,
× RELATED நகராட்சி 10வது வார்டில் பாதாள சாக்கடையில் அடைப்பு