திருப்போரூர், டிச.24:திருப்போரூர் - நெம்மேலி சாலையில் வளர்ந்துள்ள ஏற்படுத்தும் சீமைக் கருவேல மரங்களால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர் என குற்றஞ்சாட்டப்படுகிறது. பழைய மாமல்லபுரம் சாலையையும் கிழக்கு கடற்கரை சாலையையும் இணைக்கும் வகையில் திருப்போரூர் - நெம்மேலி இடையே 3 கிமீ. தூர சாலையும், பக்கிங்காம் கால்வாயில் பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி திருப்போரூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், வேளாண் அலுவலகம், தொடக்கக்கல்வி அலுவலகம், காவல் நிலையம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு கானத்தூர், முட்டுக்காடு, கரிக்காட்டுக்குப்பம், குன்றுக்காடு, கோவளம், செம்மஞ்சேரி, திருவிடந்தை, தெற்குப்பட்டு, வடநெம்மேலி, புதிய கல்பாக்கம், நெம்மேலி, சூளேரிக்காடு, கிருஷ்ணன் காரணை, பட்டிபுலம், சாலவான்குப்பம் ஆகிய கடற்கரையை ஒட்டிய கிராம மக்கள் வந்து செல்கின்றனர்.
அதேபோல் திருப்போரூர், ஆலத்தூர், தண்டலம், செம்பாக்கம், மடையத்தூர், கொட்டமேடு, மயிலை, கரும்பாக்கம், முள்ளிப்பாக்கம் உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து நெம்மேலியில் செயல்படும் அரசு கலைக்கல்லூரிக்கு தினமும் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வந்து செல்கின்றனர்.
இச்சாலையின் இருபுறமும் சீமைக் கருவேல மரங்கள் ஏராளமாக வளர்ந்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள், சைக்கிளில் செல்வோர், நடந்து செல்வோர் மீது உரசி காயத்தை ஏற்படுத்துவதோடு, வாகன ஓட்டிகள் மீது இந்த கருவேல மரங்களின் முட்கள் பட்டு கண்ணை பதம் பார்க்கின்றன. இரவு நேரங்களில் இதனால் பாதிக்கப்படும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தை சந்திக்கின்றனர்.
சாலையை பராமரிக்க வேண்டிய நெடுஞ்சாலைத்துறை பாரா முகத்தோடு இருப்பதால் சீமைக்கருவேல மரங்கள் பெரிய அளவில் வளர்ந்து விட்டன.
எனவே, திருப்போரூர் - நெம்மேலி இடையே நெடுஞ்சாலையில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் முன் வர வேண்டும். சாலையில் நிழல் தரும் மரங்களை நட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.