நீடாமங்கலம்,டிச.24: நாகை-மைசூர் தேசிய நெடுஞ்சாலை நீடாமங்கலம் பேரூராட்சி வழியாக செல்கிறது.இந்தசாலை கடந்த சில நாட்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் நகரில் செல்லும் சாலைமுழுவதும் ஒரு அடி ஆழம் பள்ளம் விழுந்து மிகவும் மோசமான நிலையில் வாகன ஓட்டிகள் அச்சத்தில் வாகனங்களை ஓட்டிச்சென்றனர். இந்நிலையில் தற்போது கப்பி கலவை கொட்டியும் சாலை மிகவும் மோகமாக உள்ளது. இந்நிலையில் நீடாமங்கலம் வர்த்தகர் சங்கத்தலைவர் ராஜாராமன் தலைமையில் மன்னார்குடி கோட்டாட்சியரிடம் மனு ஒன்று கொடுத்துள்ளனர். அதில் நீடாமங்கலம் கடை தெரு பகுதிகளில் உள்ள சாலைகளின் பள்ளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் சிமென்ட் கலவை கொட்டப்பட்டது. தற்போது அந்த சிமென்ட் கலவைகளின் தூசிகள் கடை தெரு பகுதிகளில் அனைத்து கடைகளிலும் பறந்து வியாபாரிகள்,பொதுமக்கள்,பள்ளி மாணவ, மாணவிகள் உடல் ரீதியாகவும்,வர்த்தகரீதியாகவும் மிகவும் பாதிப்புக்குள்ளாவதால் தாங்கள் உடனடியாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்து கடைதெரு பகுதிகளில் உடனடியாக தார்சாலை அமைத்து தர வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டிருந்தது.