வேலூர், டிச.22: சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக் ரேஸ் செல்லும் வாலிபர்களால் பொதுமக்கள் விபத்து எண்ணிக்கை அதிகரிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். எனவே, போலீசார் கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு 63 ஆயிரத்து 920 வாகன விபத்துகள் நடந்துள்ளது. இதில் 12 ஆயிரத்து 216 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 50 சதவீதத்துக்கும் அதிகமான விபத்துகள் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுதல், கவனக்குறைவு ஆகியவையே 90 சதவீதத்துக்கும் அதிகமான விபத்துக்கு காரணமாக இருக்கிறது. இந்நிலையில், நெடுஞ்சாலைகளில் அத்துமீறி வாலிபர்கள் பைக் ரேஸ் செல்வதால் விபத்துகள் அதிகரிப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடந்த வாலிபர்கள் பைக் ரேஸ் செல்வது அதிகரித்து வருகிறது. அதிவேகமாக செல்பவர்கள், வாகனங்களுக்கு இடையே நுழைந்து தாறுமாறாக ஓட்டிச் செல்கின்றனர். இதனால், விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே, பைக் ரேஸ் செல்பவர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். குறிப்பாக சனி, ஞாயிறு கிழமைகளில் அதிகளவில் பைக் ரேஸ் செல்கின்றனர். எனவே, குறிப்பிட்ட நேரத்தில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்’ என்றனர்.