கும்மிடிப்பூண்டி, டிச.22: கும்மிடிப்பூண்டி அருகே ஆரணி ஆற்றில் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரணி பேரூராட்சி பிஞ்சலார் தெருவை சேர்ந்தவர் ஹரிபாபு (35). இவர் கும்மிடிப்பூண்டியில் உள்ள கொரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்களுடன் ஏ.என்.குப்பம் அணைக்கட்டு பகுதியில் ஆரணி ஆற்றில் குளிக்கச் சென்றார். அப்போது ஆற்றின் ஆழப்பகுதிக்கு சென்ற ஹரிபாபு, அவரது நண்பர்கள் கண்ணெதிரே நீரில் மூழ்கினார்.
தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் விரைந்து அவரை மீட்க முயற்சித்தும் இயலவில்லை. இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த பொன்னேரி தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தலைமையில் 8 பேர் கொண்ட தீயணைப்பு துறையினர் 12 மணிநேர போராட்டத்திற்கு பிறகு ஹரிபாபுவின் உடலை மீட்டனர். இதுகுறித்து ஆரணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.