×

பூட்டிய குடிசையில் இருந்து வாலிபர், பெண் சடலம் மீட்பு

ஆவடி, டிச. 22: ஆவடியில் பூட்டிய குடிசையில் இருந்து ஒரு வாலிபர், இளம்பெண் சடலத்தை போலீசார் மீட்டனர். ஆவடி நந்தவனமேட்டூர், கன்னியம்மன் கோயில் தெருவில் பூட்டிய குடிசையில் இருந்து நேற்று இரவு துர்நாற்றம் வீசியது. தகவலறிந்து ஆவடி இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையில் போலீசார் வந்து உட்புறமாக பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது மேற்கூரையில் இருந்த மூங்கில் கம்பத்தில் பெண் தூக்கிட்டு சடலமாக தொங்கினார். அவரது அருகில் தரையில் ஒரு வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதையடுத்து இருவரின் சடலத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் இறந்து கிடந்த பெண், ஆவடி வீராபுரத்தை சேர்ந்த லட்சுமி (35) என தெரிந்தது. ஆனால் சடலமாக கிடந்த 40 வயது மதிக்கத்தக்க அந்த வாலிபர் யார்? என தெரியவில்லை.  இந்த வீட்டிற்கு வாலிபர் மட்டும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு  வாடகைக்கு குடி வந்துள்ளார். பின்னர் லட்சுமி அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றதாக கூறப்படுகிறது. எனவே அவர்கள் இருவரும் கள்ளக்காதலர்களாக இருக்கலாம் என்றும், அந்த தகராறில் வாலிபரை கொன்றுவிட்டு இளம்பெண் தூக்கிட்டு  தற்கொலை செய்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் ஆவடி போலீஸ் உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்: திருநின்றவூர் அருகே கொட்டாம்பேடு, அண்ணா தெருவை சேர்ந்தவர் முருகன் (40). வெல்டர். திருமணம் ஆகவில்லை. கடந்த 18ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற முருகன் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் முருகன் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று மதியம், முருகன் அதே பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் சடலமாக அழுகிய நிலையில் மிதந்தார். தகவலறிந்து திருநின்றவூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Plaintiff ,hut ,
× RELATED இருளர் குழந்தைகளுக்காக ஒற்றை குடிசைக்குள் இயங்கும் ‘அலை!’