×

சேரன்மகாதேவி, முக்கூடலில் பைக், செல்போன் திருடிய வாலிபர்கள் கைது

வீரவநல்லூர், டிச. 19: சேரன்மகாதேவி, முக்கூடலில் பைக், செல்போன் திருடிய வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். சேரன்மகாதேவி புத்தராயாதவர் தெருவை சேர்ந்தவர் சுடலை மகன் குப்புசாமி என்ற சுரேஷ்(35), பூ வியாபாரி. இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டு வாசலில் பைக்கை நிறுத்தியிருந்தார். நேற்று அதிகாலை ஐயப்ப பக்தர்போல் மாலை அணிந்து வந்த வாலிபர் ஒருவர், சுரேஷ் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த பைக்கை திருடிக் கொண்டு தெருவின் மறுபக்கம் வழியாக தள்ளிச் சென்றுள்ளார். மெயின்ரோட்டுக்கு போக வழி தெரியாமல் தேரடி வீதி வழியாக பைக்கை தள்ளி வந்துள்ளார். அவ்வழியாக வந்தவர் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரனாக பேசியதால் சந்தேகமடைந்து உள்ளூர் நபர்களின் உதவியோடு அவரை சேரன்மகாதேவி போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், பைக் திருடிய நபர் திருப்பூரை சேர்ந்த முனியசாமி மகன் பொன்னுச்சாமி(21) என்பது தெரியவந்தது. இவர் சேரன்மகாதேவியில் பைக்கை திருடுவதற்கு முன்பு மேலப்பாளையத்தில் ஒரு பைக்கை திருடி அம்பை நோக்கி சென்றுள்ளார். வீரவநல்லூரை அடுத்த வெள்ளாங்குளி அருகே செல்லும்போது பைக்கில் பெட்ரோல் காலியாகவே சாலையோரம் இருந்த புதருக்குள் பைக்கை மறைத்துவிட்டு சேரன்மகாதேவிக்கு வந்து சுரேஷ் பைக்கை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பைக்கையும் பறிமுதல் செய்து பொன்னுச்சாமியிடம் தீவிர விசாரணை நடத்து வருகின்றனர்.

பாப்பாக்குடி: முக்கூடல் முத்துமாலை அம்மன் கோயில் அருகே தாமிரபரணி ஆற்றில் மருதம்புத்தூர் மீனாட்சிபுரம் தெருவை சேர்ந்த லட்சுமண பெருமாள் மகன் மனோகர், இதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் மாரிமுத்துவுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிள் பெட்டியில் செல்போன் மற்றும் உடமைகளை வைத்து பூட்டியுள்ளார் ஆற்றில் குளித்துவிட்டு வந்து பார்க்கும் போது மோட்டார் சைக்கிள் பெட்டி மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு செல்போன் திருடு போனதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து முக்கூடல் போலீசில் புகார் செய்தார். எஸ்ஐ செல்வராஜ், செல்போன் நெட்வொர்க் உதவியுடன் கைவரிசை காட்டியவர் தேடினார். இதில் செல்போனை திருடியவர், கோட்ராங்குளம் ராஜ்குமார் (30) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், ராஜ்குமார் மீது நெல்லை, தாழையூத்து, வி.கே.புரம் உள்பட பல்வேறு காவல்நிலையங்ளில் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும், முக்கூடல் ஆற்றில் தொடர்ந்து செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. விசாரணைக்கு பிறகு போலீசார், ராஜ்குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளை. சிறையில் அடைத்தனர்.

Tags : Cheranmagadevi ,
× RELATED சேரன்மகாதேவியில் குண்டாசில் வாலிபர் கைது