கூடுவாஞ்சேரி, டிச. 19: மறைமலைநகர் நகராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட 21வது வார்டு தைலாவரத்தில், வள்ளலார் நகர், ராஜிவ்காந்தி நகர், புவனேஸ்வரியம்மன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இங்கு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அப்போது, தெரு குழாயில் தண்ணீர் பிடிக்கும்போது அடிக்கடி பெண்களிடையே பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து காவல் நிலையங்களிலும், நகராட்சி அலுவலகத்துக்கும் தொடர்ந்து புகார் வந்தது. இதனையடுத்து நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. தற்போது, முதற்கட்டமாக நகராட்சிக்கு உட்பட்ட 1 மற்றும் 21வது வார்டு பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்குவதற்காக பைப்புகள் பதிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மறைமலைநகர் நகராட்சி ஆணையாளர் விஜயகுமாரியிடம் கேட்டதற்கு, “நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். தற்போது, முதற்கட்டமாக நகராட்சிக்கு உட்பட்ட 1 மற்றும் 21வது வார்டு பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்குவதற்காக பைப் மற்றும் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், மின்சார கட்டணம் கட்டுவதுபோல் மாதந்தோறும் குடிநீர் கட்டணம் வசூலிக்கப்படும். அல்லது 6 மாதத்துக்கு ஒருமுறை வீட்டுவரி செலுத்தும்போது குடிநீர் கட்டணமும் மொத்தமாக சேர்த்து வசூலிக்கப்படும்” என்றார். குடிக்க ஏதுவாக இல்லை: மறைமலைநகர் நகராட்சியில் குழாய் மூலம் வழங்கப்பட்டு வரும் குடிதண்ணீர் மக்கள் குடிப்பதற்கு ஏதுவாக இல்லை. இதில், ஒரு சில நேரம் மட்டும்தான் பிளிச்சிங் போடப்பட்டு வருகிறது. மற்ற நேரங்களில் கலங்களாக சுகாதார மற்ற முறையில் தண்ணீர் வருகிறது. இதனை குடிப்பவர்களுக்கு சளி, இருமல், தொண்டைவலி, ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு நோய்கள் உருவாகுகிறது. இதனால், பணம் கொடுத்து தினமும் கேன் தண்ணீர் வழங்க வேண்டிய அவலநிலை உள்ளது. அனைத்து வீடுகளுக்கும் குழாய் அமைத்து கொடுக்கப்படுகிறது. இதனை வைத்து மாதந்தோறும் கட்டணம் வசூலிக்க நகராட்சி நிர்வாகம் முடிவெடுத்திருப்பது வேதனையாக உள்ளது என்றும் பொதுமக்கள் புலம்புகின்றனர்.