திருவில்லிபுத்தூர், டிச. 18:விபத்தில் காயம் அடைந்தவருக்கு ரூ.4 லட்சத்து 72 ஆயிரம் நஷ்டஈடு வழங்க தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ராஜபாளையம் அருகே உள்ளது சொக்கநாதன் புதூர். அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (53). இவர் டெய்லராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 6.12.2015ம் ஆண்டு சத்திரப்பட்டி அருகே பைக்கில் சென்றபோது எதிரே வந்த தனியார் பேருந்து முருகேசன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முருகேசன் தற்போது மாற்றுத்திறனாளியாக உள்ளார்.
இதனால் தனக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என திருவில்லிபுத்தூரில் உள்ள தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முருகேசன் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரண், முருகேசனுக்கு 4 லட்சத்து 72 ஆயிரத்தி 100 ரூபாய் வழங்க உத்தரவிட்டார். அந்த தொகையை ராஜபாளையம் ஓரியண்டல் நிறுவனம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.