திருமங்கலம், டிச. 18: திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில், நாளை அஷ்டமி சப்பரத் திருவிழா நடக்கிறது. உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும், இறைவன் படி அளப்பதை உணர்த்தும் வகையில், திருமங்கலம் மீனாட்சியம்மன் சொக்கநாதர் கோயிலில், மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி நாளில் அஷ்டமி சப்பரத்திருவிழா நடக்கும். இதனடிப்படையில், இந்தாண்டு நாளை (டிச.19) அஷ்டமி சப்பரத் திருவிழா நடக்கிறது. இதையொட்டி நாளை காலை 4.30 மணிக்கு மீனாட்சி, சொக்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
தொடர்ந்து காலை 7.31 மணிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை பூஜைகள் நடைபெற உள்ளன. காலை 8 மணிக்கு சாமியும் அம்மனும் சப்பரத்தில் ஏறி, நகரின் அனைத்து உயிரினங்களுக்கும் படியளக்கும் விதமாக முக்கிய வீதிகளான மீனாட்சியம்மன் கோயில், உசிலம்பட்டி ரோடு, விருதுநகர் ரோடு, பசும்பொன் தெரு, பி.டி.ராஜன் தெரு, பெரியகடை வீதி, எட்டுபட்டறை முத்துமாரியம்மன் கோயில் தெரு, சோமசுந்தரம் தெரு, முன்சீப் கோர்ட் ரோடு, ராஜாஜி தெரு வழியாக வலம் வந்து கோயிலை அடைவர். அஷ்டமி சப்பரத்தில் எழுந்தருளி சுவாமி வலம் வரும்போது பக்தர்கள் திருக்கண் வைத்து வழிபடுவர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் தர்கார் சுபாசிணி, நிர்வாக அதிகாரி சக்கரையம்மாள் செய்துள்ளனர்.