திருச்சி, டிச.18: ஊரக உள்ளாட்சித் தேர்தல், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவித்தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் தேர்தல் முன்னேற்பாடு குறித்து ஆலோசனை கூட்டம் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. தேர்தல் பார்வையாளர், வருவாய் நிர்வாகம் மற்றும் மேலாண்மை இணை ஆணையர் லட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் சிவராசு, எஸ்பி ஜியாவுல்ஹக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஊரக உள்ளாட்சித் தேர்தல் பார்வையாளர் லட்சுமி பேசியதாவது: மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 14 ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் பணியாற்றி வரும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், தேர்தல் நடத்தும் அலுவலர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தல் நடத்தும் அலுவலர், கிராம ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு நேற்று நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையின் போது ஏற்பட்ட இடர்பாடுகள் குறித்தும் வருகின்ற 19ம் தேதி அன்று மாலை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்வது குறித்தும், மாவட்டத்தில் பதட்டமான மிகவும் பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறிவது குறித்தும், வாக்குச்சாவடி மையங்கள், வாக்கு எண்ணிக்கை மையங்கள், வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு நாளை (இன்று) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையும், 19ம் தேதி அன்று காலை 10 மணி முதல் மாலை 3 வரையும், வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்றார்.
டிஆர்ஓ சாந்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், மகளிர் திட்ட இயக்குநர் சரவணன், கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் அருளரசு, மாவட்ட ஆவின் மண்டல இணை மேலாளர் சுமன், கலெக்டர் பிஏக்கள் மோகனசுந்தரம் (தேர்தல்), பாஸ்கர் (வளர்ச்சி) உள்பட பலர் பங்கேற்றனர்.