தோகைமலை, டிச. 18: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ஆர்டிமலையில் உள்ள விராச்சிலேஸ்வரர் மற்றும் பெரியநாயகியம்மன் கோயிலில் கார்த்திகை மாதத்தின் கடைசி மற்றும் 5வது சோமவாரம் நிகழ்ச்சியை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.முன்னதாக புண்ணிய நதிகளின் தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டு விராச்சிலேஸ்வரர் மற்றும் பெரியநாயகி சமேத சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிசேகம் செய்தனர். பின்னர் கோயிலில் அமைந்துள்ள மண்டபத்தில் 57 ஆண்டுகளுக்கு பிறகு 108 சங்குகள் மற்றும் 108 கலசங்கள் வைத்து நல்ல பருவ மழை, உலக அமைதி, நல்ல கல்வி, குழந்தை வரம், தடையற்ற திருமணம், கிராமங்கள் செழிப்புடன் இருக்க வேண்டும் என்று பல்வேறு வரங்கள் கேட்டு 108 சிறப்பு பூஜைகள் செய்தனர்.