ஓமலூர், டிச.17: ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 271 வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி முகாம் நடந்தது.
ஓமலூர் ஒன்றியத்தில் 271 வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய 271 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் நிலை1, நிலை, 2 என மொத்தம் 1516 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, முதல்கட்ட பயிற்சி ஓமலூர் அருகே தனியார் மகளிர் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதில், தேர்தல் பணி, பொறுப்பு, கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறை, ஓட்டுச்சாவடிக்குள் அனுமதிக்கப்படும் நபர்கள் குறித்த விபரம், 4 பதவிகளுக்குமானவாக்கு சீட்டுக்கள், வாக்குச்சாவடிக்கு கொண்டுசெல்ல வேண்டிய 41 வகை பொருட்கள், வாக்குப்பதிவுக்கு முந்தைய மற்றும் வாக்குப்பதிவு நாளில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறை, வாக்குச்சாவடியில் மின்சாரம், குடிநீர், கழிப்பிடம்,மின் தடை ஏற்பட்டால் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
மேலும், வாக்குப்பதிவு செய்வது குறித்தும், எந்தெந்த கலர் சீட்டுக்கள் எந்தெந்த பதவிக்கு என்பது குறித்தும்நேரடியாக செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. ஓமலூர் ஒன்றியதேர்தல் நடத்தும் தேர்தல் அலுவலர் முருகன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தேர்தல் நடத்தும் அலுவலர் தாமோதரன் மற்றும் தேர்தல் அலுவலர்கள் கலந்துகொண்டு பயிற்சிகள் அளித்தனர். இதேபோன்று காடையாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பூசாரிப்பட்டி தனியார் பொறியியல் கல்லூரியிலும், தாரமங்கலம் ஒன்றியத்தில் உள்ள வாக்குச்சாவடி மைய பணியாளர்களுக்கு தனியார் பள்ளியிலும் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. 2ம் கட்ட பயிற்சி வரும் 21ம் தேதி இதே மையங்களில் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த பயிற்சியில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.