திருச்செங்கோடு, டிச.17: திருச்செங்கோடு அருகே கந்தம்பாளையத்தில் செயல்பட்டு வரும் காந்தி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில், “இன்ரோ டு இம்பெக்ஸ்” எனற தலைப்பில் ஏற்றுமதி-இறக்குமதி தொடர்பான ஒரு நாள் கருத்தரங்கு நடைபெற்றது. துவக்க விழாவிற்கு கல்லூரியின் தாளாளர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். இயக்குனர்கள் சிவா, வித்யா சிவா முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக சேலம் கேவிபி எக்ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் வெங்கடாசலம் கலந்து கொண்டார். அவர், ஏற்றுமதி- இறக்குமதி நிறுவனம் துவக்கும் விதம், ஏற்றுமதி செய்ய உகந்த பொருட்கள், இறக்குமதியாளரிடம் இருந்து வங்கி மூலம் பணம் பெறுதல் போன்றவை குறித்து விளக்கி பேசினார். மேலும், மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். முதல்வர் செந்தில்குமார் வரவேற்றார். முடிவில் துணை முதல்வர் மணிமேகலை நன்றி கூறினார்.