பொன்னமராவதி. டிச.17: பொன்னமராவதி ஒன்றியத்தில் 351 உள்ளாட்சிப் பதவிகளுக்கு போட்டியிட நேற்று வரை 1055 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் பொன்னமராவதி ஒன்றியத்தில் 42 ஊராட்சி மன்றத் தலைவர், 16 ஒன்றியக் கவுன்சிலர், 2 மாவட்ட கவுன்சிலர், 291 ஊராட்சி உறுப்பினர் என 351 பதவிகளுக்கு கடந்த 9ம் தேதி தொடங்கி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று 16ம் தேதி வரை ஊராட்சித் தலைவருக்கு 237பேர், ஊராட்சி உறுப்பினருக்கு 702பேர், ஒன்றியக் கவுன்சிலருக்கு 104 பேர், மாவட்ட கவுன்சிலருக்கு 12பேர் என 1055பேர் வேட்பு மனுச் செய்துள்ளனர்.
கடைசி நாளான நேற்று மட்டும் திமுக, அதிமுக மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றியக் கவுன்சிலர் வேட்பாளர்கள் உட்பட 487 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.திமுக வேட்பாளர்கள் திருமயம் எம்எல்ஏ ரகுபதி தலைமையில் ஒன்றியச் செயலாளர்கள் அடைக்கலமணி, முத்து உள்ளிட்ட திமுக வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். அதிமுக வேட்பாளர் ஒன்றியச் செயலாளர் பழனியாண்டி தலைமையில் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.