திருப்பூர், டிச 17: திருப்பூரில் தீபாவளி பலகார சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி செய்த 2 பேரை கைது செய்ய கோரி நேற்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திருப்பூர் எஸ்.பி அலுவலகத்தில் மனு அளித்தனர். திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ பகுதியில் வாசு (48), தினேஷ் (28) ஆகியோர் இணைந்து கடந்த 5 ஆண்டுகளாக திருப்பதி சிறுசேமிப்பு பண்டு என்கிற பெயரில் சீட்டு நடத்தி வந்தனர். இந்த தீபாவளி பண்டில் அப்பகுதி பொதுமக்கள் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் சேர்ந்து வாரம் ஒன்றிற்கு ரூ. 100 முதல் ரூ. 500 வரை பணம் செலுத்தி வந்தனர்.
இந்நிலையில் தீபாவளி சமயத்தில் பொதுமக்களுக்கு பணம் வழங்காமல் வீடு, கடை ஆகியவற்றை காலி செய்து தலைமறைவாகினர். இது குறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கடந்த 23 ம் தேதி போலீஸ் எஸ்.பியிடம் மனு அளித்தனர். போலீஸ் கண்காணிப்பாளர் திஷா மித்தல் உத்தரவின் பேரில் ஊத்துக்குளி போலீசார் இருவர் பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். ஆனால் கைது செய்யவில்லை. இந்நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பல நாட்கள் ஆன நிலையில் இருவரையும் இன்னும் கைது செய்யாமல் உள்ளதாகவும், அவர்களை உடனடியாக கைது செய்ய கோரி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேற்று எஸ்.பி அலுவலகத்தில் மனு அளித்தனர். இவ்விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நபர்களை கைது செய்து தங்களது பணத்தை திரும்ப பெற்று தரும்படி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.