×

திருநின்றவூர் பேரூராட்சியில் சாலைகளில் ஓடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

ஆவடி, டிச.17:  திருநின்றவூர் பேருராட்சியில் சாலைகளில் ஓடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
முத்தமிழ் நகர், திருவேங்கடநகர், பெரியார் நகர், அந்தோணி, தாசர்புரம், லட்சுமிபுரம், கிருஷ்ணாபுரம், வச்சலாபுரம், முருகேசன் நகர், லலிதாஞ்சலி நகர், பிரகாஷ் நகர், சாந்தி நகர், ஐ.ஒ.வி.நகர், இந்திராநகர், பாலகிருஷ்ணா நகர், வசந்தம் நகர் உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் உள்ளன. இங்குள்ள 18 வார்டுகளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இன்றைய நவநாகரீக காலத்தில் பாதாள சாக்கடை திட்டம் என்பது மிக முக்கியானதாகும். சென்னை மற்றும் ஒட்டியுள்ள பலநகரங்களில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் திருநின்றவூர் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் பல ஆண்டாக இல்லை. இதுகுறித்து, பொதுமக்கள் கூறுகையில், திருநின்றவூர் பேரூராட்சி பகுதியில் உள்ள பல குடியிருப்புகளில் கழிவுநீர் தொட்டிகள் (செப்டிக் டேங்க்) முன் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தொட்டிகள் பல வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் முறையான அளவில் வடிவமைப்பு செய்யப்படவில்லை. இதனால் தொட்டியில் கழிவுநீர் அடிக்கடி நிறைந்து விடுகிறது. இதனை அகற்ற பேரூராட்சியில் கூறியும், கழிவுநீர் வாகனங்களும் உடனடியாக வருவதில்லை.

இதனால் தொட்டிகளில் இருந்து கழிவுநீர் வெளியேறி முக்கிய சாலைகள், தெருக்களில் ஆறாக ஓடுகிறது. மேலும், சிறிய குடியிருப்புகளில் கழிவுநீர்தொட்டி அமைக்க இடம்  போதுமானதாக இல்லை. இதனை அடுத்து, அத்தகைய குடியிருப்புவாசிகள் சாலை ஓரத்தில் சிறிய  அளவில் உறை கிணறு கூடிய கழிவுநீர் தொட்டி  அமைக்கக்கின்றனர்.  இதிலிருந்து நாள்தோறும் அதிக அளவில் கழிவுநீர் வெளியேறி சாலையில் செல்கிறது.
மேலும், மேற்கண்ட பகுதியில் திறந்து கிடக்கும் கழிவுநீர் தொட்டிகளில் இருந்து  கொசுக்கள் உற்பத்தியாகி வருகின்றன. இவைகள் இரவு, பகல் பாராது வீடுகளுக்குள் படையெடுத்து மக்களை கடிக்கின்றன. இதனையடுத்து, அப்பகுதி மக்களுக்கு  மலேரியா உள்ளிட்ட மர்ம காய்ச்சல் பரவி வருகின்றன. இதோடு மட்டுமல்லாமல், சாலைகளில் ஓடும் கழிவுநீரால் பாதசாரிகள் நடமாட முடியவில்லை.  மேலும், சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களால் கழிவுநீர் தெளித்து பாதசாரிகள் மீது விழுந்து உடைகள் பாழாகி வருகின்றன.

மேலும், பேரூராட்சி பகுதியில் பல லட்சம் செலவில் போடப்பட்ட சாலைகளில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக, பல்வேறு சாலைகள் தேங்கிய கழிவுநீரால் பாழாகி வருகிறது. திருநின்றவூர், சி.டி.எச் சாலை, பஜாரில் வீடுகள் முன்பு உள்ள தொட்டிகளில் தேங்கி நிற்கும் கழிவு நீர் குடிநீரில் கலந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீரை சமையலுக்கு பயன்படுத்திட முடியாமல் அவதிப்படுகின்றனர் என்றனர். சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வர மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வேதனைக்குரியது. மேலும்,  பேரூராட்சி கழிவுநீர் அகற்றும் ஊர்தி இருந்தும் மக்களுக்கு பயன் இல்லை. ஏனென்றால், கழிவுநீரை ஊற்ற இடம் இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால், கழிவுநீர் ஊர்தி காட்சி பொருளாகவே உள்ளது.
இதனால், தனியார் வாகனங்கள் கழிவுநீரை அகற்ற அதிக கட்டணத்தை வசூலிக்கின்றனர்.  இவர்களிடம் இருந்து அதிகாரிகள் மாதந்தோறும் கணிசமான தொகையை வாங்கி கொண்டு பேரூராட்சி ஊர்தியை இயங்காமல் உள்ளனர்.  இதனால் கழிவுநீரை அகற்ற முடியாமல்  மக்கள் சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கின்றனர். இது குறித்து, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Thiruninvur ,roads ,
× RELATED சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள்...