×

வாலாஜாபாத் ஒன்றியம் அய்யம்பேட்டை ஊராட்சியில் மண் சாலையாக மாறிய தார்ச்சாலை

வாலாஜாபாத், டிச. 17: வாலாஜாபாத் ஒன்றியம் அய்யம்பேட்டை ஊராட்சி அம்பேத்கர் நகரில், தார்ச்சாலை பெயர்ந்து, தற்போது ஜல்லி கற்களுடன் மண் சாலையாக மாறிவிட்டது. முறையாக பராமரிக்காமல் 20 ஆண்டுகளாக அதிகாரிகளின் அலட்சியத்தால், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வாலாஜாபாத் ஒன்றியம் அய்யம்பேட்டை ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் சாலை வழியாகத்தான் தினமும் இந்திராநகர், கருக்குப்பேட்டை, நாய்யக்கன்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு நூற்றுக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். இதேபோல், அம்பேத்கர் நகர் சாலை வழியாக அய்யம்பேட்டை பஸ் நிறுத்தம் வந்து, அங்கிருந்து வாலாஜாபாத், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட பல்வேறு நகர் பகுதிகளுக்கும் பொதுமக்கள் சென்று வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், அம்பேத்கர் நகரில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. அதன்பின்னர் அந்த சாலையை முறையாக பராமரிக்கவில்லை. அதிகாரிகள் கவனிக்கவும் இல்லை. இதனால், சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு, அதில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டது. மேலும், சில நேரங்களில் பெய்த லேசான மழைக்கே, அங்கிருந்த ஜல்லிக்கற்களும் மாயமாகி, மண் சாலையாக மாறிவிட்டது. இதனால், இந்த சாலையை பயன்படுத்தி பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும், கிராம மக்களும் கடும் சிரமம் அடைகின்றனர். லேசான மழை பெய்தாலே இந்த சாலை முழுவதும் ேசறும் சகதியுமாக மாறிவிடுகிறது. இதில், பைக்கில் செல்பவர்கள் விழுந்து காயமடைவது வாடிக்கையாக உள்ளது.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், ‘அய்யம்பேட்டை ஊராட்சி அம்பேத்கர் நகரில், 800க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறோம். இந்த சாலையை பயன்படுத்தி இந்திராநகர், நாயக்கன்பேட்டை, கருக்குபேட்டை உள்பட பல்வேறு கிராம பகுதிகளுக்கு செல்கிறோம். தற்போது இந்த சாலை குண்டும் குழியுமாக மாறி ஆங்காங்கே மண் சாலையாக காணப்படுகிறது. தற்போது, ஜல்லிக்கற்கள் மட்டுமே ஆங்காங்கே உள்ள நிலையில் சேறும் சகதியாக மழை காலங்களில் காணப்படுகிறது. இச்சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தர ஒன்றிய நிர்வாகம் அல்லது மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : road ,Tarachal ,mud road ,Walajabad Union ,Ayyampet ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...