திருவாரூர், டிச.17: டெல்லியில் ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு காரணமான போலீசார் மற்றும் சங்பரிவார் அமைப்பினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அதன் பேரவை செயலாளர் சபியுல்வரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மத்தியில் ஆட்சி செய்து வரும் பிஜேபி தலைமையிலான அரசு சட்டவிரோதமாக குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ளதையடுத்து வட மாநிலங்களில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் மாணவ ,மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் தங்களது பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே அறவழியில் அமைதியான முறையில் எதிர்ப்புகளை தெரிவித்து போராடினர். டெல்லி காவல்துறை அத்துமீறி உள்ளே நுழைந்து மாணவ, மாணவிகளை சரமாரியாக தாக்கியுள்ளது. மேலும் பல்கலைக்கழக துணைவேந்தர் அனுமதியோ, பல்கலைக்கழக நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் பல்கலைகழகத்திற்குள் அத்துமீறி நுழைந்து முகத்தை துணியால் மறைத்தவாறு சங்க்பரிவார் அமைப்பை சேர்ந்த சமூகவிரோதிகள் துணையோடு இந்த கண்மூடித்தனமான தாக்குதல் அரங்கேற்றப்பட்டுள்ளது..எனவே இதுபோன்று கண்மூடித்தனமாக மதவெறி கும்பலுடன் நடைபெற்றுள்ள சம்பவத்தில் தொடர்புடைய போலீசார் மற்றும் சங்பரிவார் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சபியுல்வரா தெரிவித்துள்ளார்.