வேதாரண்யம், டிச.17: வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்திய மாமுனிவருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான் காட்சி கொடுத்த தலம். வேதங்கள் பூஜை செய்து மூடி கிடந்த கதவை அப்பரும், சம்மந்தரும் தேவார திருப்பதிகங்கள் பாடி திறந்த வரலாற்று சிறப்புடைய தலம்.இப்படி சிறப்பு வாய்ந்த இந்த தலத்தில் நேற்று கார்த்திகை கடைசி சோமாவாரத்தை முன்னிட்டு புனித நீர் அடங்கிய கடங்கள் 1008 சங்குகள் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்பு புனிதநீர் அடங்கிய கடங்கள், சங்குகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.வேதாரண்யம் சுவாமி சன்னதியில் உள்ள சரவிளக்குகள் அனைத்தும் ஏற்றப்பட்டு சன்னதி ஒளிமயமாக காட்சியளித்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர். பெரிய வௌ்ளி ரிஷப வாகனத்தில் கல்யாணசுந்தரர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோயில் பிரகாரத்தில் வீதியுலா காட்சி நடந்தது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.