அஞ்சுகிராமம், டிச. 16: அஞ்சுகிராமத்தை அடுத்த காணிமடம் யோகிராம்சுரத்குமார் மந்திராலயத்தில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி காணிமடம் யோகி ராம்சுரத்குமார் மந்திராலயம் மற்றும் ரெமிலியன் அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமில் கடலூர் மாவட்ட முதன்மை தாசில்தார் ஜெயந்தி ஆண்ட்ரூஸ் குத்துவிளக்கேற்றினார். மந்த்ராலய குரு நாமரிஷி தபஸ்வி பொன் காமராஜ் சுவாமிகள் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
இது குறித்து மந்த்ராலய குரு தபஸ்வி பொன் காமராஜ் சுவாமிகள் கூறுகையில், காணிமடம் யோகி ராம்சுரத்குமார் மந்திராலயத்தில் 1984ம் ஆண்டு முதல் 6 மாதத்திற்கு ஒரு முறை தொடர்ச்சியாக 35 ஆண்டுகள் பக்தர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்தி வருகிறோம். அந்த வகையில் இந்த முகாமில் மூட்டுவாதம், முடக்குவாதம், விடாத தலைவலி, ஆஸ்துமா, சைனஸ், தோல்நோய்கள், ரத்தசோகை உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருந்து, மாத்திரைகள், ஊட்டச்சத்து டானிக்குகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.இந்த முகாமில் ரெமிலியன் அறக்கட்டளை நிறுவனர் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் மெற்றல்டா மற்றும் டாக்டர்கள் நலம் குமார், ஆண்ட்ரூ லிசி எமல்டா, பென்சிங், அரோஷியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.