×

திருமுருகநாதசாமி கோயிலில் கொள்ளையடிக்க முயன்ற விவகாரம் துப்பு கிடைக்காமல் தனிப்படை திணறல்

திருப்பூர், டிச.16:திருப்பூர்  திருமுருகன் பூண்டியிலுள்ள திருமுருகநாதசாமி கோயில்  உண்டியலை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற விவகாரத்தில் குற்றவாளிகளை பிடிக்க துப்பு கிடைக்காமல் தனிப்படை போலீசார் திணறி வருகின்றனர். திருப்பூரை அடுத்த  திருமுருகன்பூண்டியில்  திருமுருகநாதசாமி கோயில் உள்ளது. இந்து சமய அறநிலைத்துறை மற்றும் தொல்லியல் துறையின் கட்டுபாட்டில் இருக்கும் இந்த கோயிலுக்கு தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்வார்கள். இந்நிலையில், கடந்த 29ம் தேதி இரவு மர்மநபர்கள் அந்த கோயிலின்  சுவரை கடப்பாரையால் துளையிட்டு உண்டியலை உடைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். அப்போது பலத்த சத்தம் கேட்டதால்  கோயில்  பாதுகாவலர் மூக்கன் அருகில் உள்ள திருமுருகன் பூண்டி காவல் நிலையத்திற்கு நேரில் சென்று தகவல் கொடுத்துள்ளார். போலீசார் வருவார்கள் என்று அறிந்த கொள்ளையர்கள் உண்டியலை கோயில்  வளாகத்தில் விட்டு தப்பி சென்றுவிட்டனர். தகவலின் பேரில் போலீசார் நள்ளிரவில் கோயிலில் சென்று சோதனை நடத்தினர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த திருமுருகன் பூண்டி குற்றப்பிரிவு போலீசார் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். திருமுருகன் பூண்டி கோயிலில் கொள்ளை நடந்து 15 தினங்களுக்கு மேலாகியும் இன்னும் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் தனிப்படை போலீசார் திணறி வருகின்றனர்.இது குறித்து திருமுருகன்பூண்டி இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளியிடம் கேட்டபோது, ‘‘கோயிலில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறோம். குற்றவாளிகள் இருவரும் முகமூடி அணிந்து வந்ததால் அடையாளம் காண்பதில் சிரமம் உள்ளது. அதனால் கொள்ளை முயற்சி நடந்த தினத்தில் பகல் நேரத்தில் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த பகுதியில் அதிக நேரம் நின்றவர்களை பிடித்து விசாரித்து வருகிறோம். விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம்,’’ என்றார்.

Tags : Thirumuruganathanasamy ,
× RELATED கடும் வெயிலால் வாடிய வாழைகள்