கரூர், டிச. 13: கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர்களில் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2லட்சத்துக்கு மிகாமல் உள்ள மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையாக மாணவர் ஒருவருக்கு ரூ. 2லட்சம் வரை முதற்கட்டமாக 100 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகள். பட்டியிலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு பயில வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 2லட்சத்துக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும். இந்த கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பம் குறித்த தகுதி மற்றும் விருப்பமுள்ள மாணவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அறை எண் 108ல் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.