திருப்பூர், டிச.13: திருப்பூர் மாநகரில் பணியாற்றும் போலீசாருக்கு சைபர் கிரைம் குறித்த பயிற்சி வகுப்பு நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் பணியாற்றும் முதல் நிலை போலீசார் மற்றும் காவல் நிலையங்களில் பணியாற்றும் போலீசாருக்கு சைபர் கிரைம் குறித்து பயிற்சிகள் அளிக்க தமிழக போலீஸ் தலைமை முடிவு செய்தது. அதன் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களில் கிரேடுகள் வாரியாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாநகரப்பகுதிகளில் பணியாற்றும் போலீசாருக்கான பயிற்சி வகுப்பு நேற்று மாநகர போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் நடைபெற்றது. துணை கமிஷ்னர் (நிர்வாகம்) பிரபாகரன், உதவி கமிஷ்னர் சுந்தர்ராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கோவை சைபர் சொசைட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் கலந்துகொண்டு பயிற்சி அளித்தார். அப்போது, இணையதளம் மூலமாக ஏற்படும் குற்றச்சம்பவங்கள் குறித்தும், அவற்றை தடுக்கும் வழிமுறை குறித்தும் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பாக புகார்கள் வந்தால் அவற்றை கையாளும் முறைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி முகாம் வரும் 21ம் தேதி வரை ஒவ்வொரு தலைப்பில் நடக்க இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.