×

மேம்பாலத்தை பஸ் ஸ்டாண்ட் வரை நீட்டிக்க வலியுறுத்தல்

ஈரோடு, டிச. 13: இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சி சார்பில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணி தலைமை தாங்கினார். இதில், சிறப்பு அழைப்பாளராக கட்சியின் நிறுவன தலைவர் வீரா.சிதம்பரம் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். சித்தோடு ஐஆர்டிடி கல்லூரி பகுதிகளில் புறநகர் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும். ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை பகுதியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை மேட்டூர் ரோட்டில் பஸ் ஸ்டாண்ட் வரை நீட்டிக்க வேண்டும். பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் சூரியம்பாளையம் கிராமத்தில் அரசு புறம்போக்கு இடத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனி வீடுகள் கட்ட இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.

ஈரோடு காளைமாட்டு சிலை அருகே டாக்டர் அம்பேத்கருக்கு சிலை வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது. இந்த நிலங்களை விளை நிலங்களாக மாற்றி விவசாயத்தை பாதுகாக்க நிலமற்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தலா 3 ஏக்கர் வீதம் வழங்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் கட்சி சார்பில் வாய்ப்புள்ள இடங்களில் போட்டியிடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக் கூட்டத்தில், மாவட்ட செயலாளர் கிருஷ்ணகோபால், மாநகர் மாவட்ட செயலாளர் நரசிம்மராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : bridge ,bus stand ,
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை