×

கணியம்பாடி அருகே ஆசிரியர் இடம் மாறுதலை வாபஸ் பெற வேண்டும்

வேலூர், டிச.13: கணியம்பாடி அருகே அரசு ஆசிரியர் இடமாறுதலை வாபஸ் பெற வேண்டும் என்று முதன்மைக்கல்வி அலுவலகத்தில் கிராம மக்கள் நேற்று மனு அளித்தனர். கணியம்பாடி ஒன்றியம் நஞ்சுகொண்டாபுரம் பகுதி மக்கள் நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

எங்கள் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1 முதல் 5ம் வகுப்பு வரை 92 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 4 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு ராமமூர்த்தி என்ற ஆசிரியரை துத்திக்காடு நடுநிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்துள்ளனர். எங்கள் பகுதி அருகே உள்ள மேதல்பாடி, வேப்பம்பட்டு, கம்மவான்பேட்டை, காட்டுப்புத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் வெறும் 5 முதல் 6 மாணவ, மாணவிகள் மட்டுமே படிக்கின்றனர். ஆனால் அங்கெல்லாம் 2 ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால் 92 மாணவர்கள் படிக்கும் எங்கள் பகுதியில் தற்போது 4 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கிறது. எனவே இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர் ராமமூர்த்தியை மீண்டும் எங்கள் பகுதி பள்ளிக்கே நியமிக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற அதிகாரிகள், இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

Tags : Teachers ,Ganiyambadi ,
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...