திருச்செங்கோடு, டிச.12: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில், கார்த்திகை பௌர்ணமியை முன்னிட்டு நேற்று ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில், பக்தர்களுக்கு பாதையெங்கும் சாம்பார் சாதம், தயிர் சாதம், குளிர்ந்த நீர், மோர், டீ உள்ளிட்டவை வழங்கப்பட்டது. பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயில், ஆபத்து காத்த விநாயகர் கோயில், பத்ரகாளியம்மன் கோயில் மற்றும் அருள்மாரியம்மன் கோயில் ஆகிய இடங்களில், பக்தர்கள் திரண்டு வழிபாடு நடத்தினர். பௌர்ணமி அன்னதான விழாக்குழு சார்பில், அருள்மாரியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.