பாபநாசம், டிச. 12: பாபநாசம் ரயில் நிலைய பெயர் பலகை உடைந்து கிடக்கிறது. இதை புதிதாக அமைக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்துக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் வருகிறது. ஆனால் இந்த ரயில் நிலையத்தில் போதுமான அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை. ரயில் நிலையத்துக்கு செல்லும் சாலையில் உள்ள பெயர் பலகை உடைந்து கிடக்கிறது. இதை கூட ரயில்வே நிர்வாகம் கவனிக்கவில்லை. இதேபோன்று ரயில் தண்டவாளம் அருகில் உள்ள சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் தண்டவாளத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே ரயில் நிலைய பெயர் பலகையை புதிதாக அமைக்க வேண்டும். மேலும் தண்டவாளம் அருகில் உள்ள குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டுமென ரயில்வே நிர்வாகத்துக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்