திருச்செங்கோடு, டிச.11: திருச்செங்கோட்டில், காவலன் செயலி பயன்பாடு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நேற்று கே.எஸ்.ஆர்.கல்லூரி மற்றும் செங்குந்தர் கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது. இந்த கூட்டத்தில் திருச்செங்கோடு டிஎஸ்பி சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, காவலன் செயலியின் பயன், இந்த செயலியை பயன்படுத்தி பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள், முதியோர்கள் அவசர காலத்தில் எப்படி தொடர்பு கொள்வது என்பது குறித்து விளக்கி கூறினார். கல்லூரி மாணவிகளில் ஒரு சிலரை தவிர செயலியை யாரும் பயன்படுத்தவில்லை என்பதை அறிந்து தான், தொடர்ந்து மாணவிகளுக்கு இளம் பெண்களுக்கு வயதான முதியவர்களுக்கு அறிவுறுத்தி வருவதாக டிஎஸ்பி சண்முகம் கூறினார்.
ஐதராபாத் சம்பவம் குறித்தும், நாட்டின் பல்வேறு சம்பவங்களை உதாரணம் காட்டியும் பேசிய டிஎஸ்பி சண்முகம், இந்த செயலியை பயன்படுத்தியிருந்தால், பல சம்பவங்களை தடுத்திருக்கலாம் என கூறினார். இந்த நிகழ்ச்சியில், திருச்செங்கோடு புறநகர் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ஜான்சி, எஸ்ஐ மலர்விழி மற்றும் கல்லூரிகளின் பேராசிரியர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.