கரூர், டிச. 11: போக்குவரத்துக்கு இடையூறாக கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கரூர் நகராட்சிக்குட்பட்ட மார்க்கெட் பகுதியில் இருந்து காசிம் சாகிப் தெருவுக்கு செல்லும் குறுகிய சாலை உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் அதிகளவு குடியிருப்புகள் உள்ளன. இந்த சாலையில் இரட்டை வாய்க்கால் குறுக்கிடுவதால் வாய்க்கால் பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் வாய்க்கால் பாலத்தை முற்றிலும் மறைக்கும் வகையில் மார்க்கெட் பகுதியில் சேகரிக்கப்பட்டுள்ள குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் பாதசாரிகளும், இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்களும் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை இந்த பகுதியில் உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு காசிம் சாகிப் தெருவின் நுழைவு வாயில் பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை விரைந்து அகற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.