×

பள்ளிகொண்டா அடுத்த ஐதர்புரத்தில் மின்விளக்கு எரியாததால் இருளில் மூழ்கிய மேம்பாலம்

பள்ளிகொண்டா, டிச.11: பள்ளிகொண்டா அடுத்த ஐதர்புரத்தில் மின்விளக்கு எரியாததால் இருளில் மூழ்கியுள்ள மேம்பாலத்தில் மின்விளக்குகளை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்துள்ளனர். வேலூர் மாவட்டத்தை ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் முக்கிய பாலமாக பள்ளிகொண்டா ஐதர்புரம் பாலாற்று பாலம் இருந்து வருகிறது. முதலில் தரைப்பாலமாக இருந்த நிலையில், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது பொதுமக்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டது. இதனால் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநில பகுதிகளுக்கு எளிதாக பொதுமக்கள் சென்று வந்தனர்.

இந்நிலையில், கடந்த 6 மாத காலமாக மேம்பாலத்தில் உள்ள 30 மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மின்விளக்கு எரியாததால் மேம்பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி தவிக்கின்றனர்.மேலும் இரவு நேரங்களில் மேம்பாலத்தில் நடந்து செல்பவர்களிடம் வழிப்பறி நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மேம்பாலத்தில் எரியாத மின்விளக்குகளை மாற்றி புதிய மின்விளக்குகளை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Pallikonda ,Aithapurapuram ,
× RELATED மினி லாரி மோதி உடைந்த மின்கம்பம் பள்ளிகொண்டா துளசி நகரில்