ஊத்துக்கோட்டை, டிச. 11: கார்த்திகை மாத கிருத்திகையை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர். பெரியபாளையம் அருகே ஆரணி அடுத்த சின்னம்பேட்டில் சிறுவாபுரி முருகன் கோயில் உள்ளது. இக்கோயில் சமீப காலமாக மிகவும் பிரசித்தி பெற்று வருகிறது. இந்நிலையில் கார்த்திகை மாத கிருத்திகையை முன்னிட்டு இக்கோயிலில் உள்ள மூலவர் பால சுப்பிரமணி சுவாமிக்கு நேற்று அதிகாலையில் பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதனை ஒட்டி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் முருகனை தரிசனம் செய்தனர்.
இதே போல் ஊத்துக்கோட்டை பஸ் நிலையம் அருகில் நாகவல்லியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள பால முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதே போல் ஊத்துக்கோட்டை அருகே ராமகிரி கிராமத்தில் மலை மீது உள்ள முத்துக்குமார சாமிக்கு கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இந்த கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்துகொண்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.