×

சுங்குவார்சத்திரம் அருகே பரிதாபம் பைக் மீது கார் மோதி 2 பேர் பலி

பெரும்புதூர், டிச. 11: பெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் அடுத்த மொளச்சூர் கிராமத்தை சேர்ந்த குமார் (48). மாடு வியாபாரி. நேற்று மதியம் குமார், தனது நண்பர் சேனா (40) என்பவருடன், பைக்கில் சுங்குவார்சத்திரம் அடுத்த சந்தவேலூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் சென்றார். அங்கு, பைக்கில் பெட்ரோல் நிரப்பி கொண்டு, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர். அந்த நேரத்தில் சென்னையில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வேகமாக வந்த கார், பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும், படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். தகவலறிந்து சுங்குவார் சத்திரம் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, சடலங்களை கைப்பற்றி பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். n மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி (50). விவசாய கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு பக்கிரிசாமி, வழக்கம்போல் தனது கூரை வீட்டில் சாப்பிட்டு முடித்து தூங்கி கொண்டிருந்தார். நேற்று அதிகாலையில், அவரது வீட்டின் ஒருபக்க சுவர் திடீரென இடிந்து உள்ளே தூங்கி கொண்டிருந்த பக்கிரிசாமி மீது சாய்ந்தது. இதில், இடுபாடுகளில் சிக்கிய அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து மதுராந்தகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி மதுராந்தகம் அரசு மரத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

nதிருப்போரூர்: சென்னை சோழிங்கநல்லூரை அடுத்த காரப்பாக்கம் கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தசரதன். இவரது மனைவி பதிபூரணம் (68). நேற்று மதியம் 12 மணியளவில் பதிபூரணம், தனது உறவினர்களுடன் திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு சென்றார். கோயிலில் தரிசனம் முடிந்து வந்த பதிபூரணம் 16 கால் மண்டபம் அருகே வழங்கப்பட்ட அன்னதானத்தை வாங்கி சாப்பிடுவதற்காக வரிசையில் நின்றார். அப்போது அங்கிருந்த பெண்கள் சிலர், அவரை சூழ்ந்து கொண்டு வேகமாக செல்லும்படி கூறி தள்ளிவிட்டனர்.  இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த பதிபூரணத்தை அவரது உறவினர்கள் தூக்கிப் பிடித்தனர். அப்போது அவரது கழுத்தில் இருந்த 7 சவரன் தங்க செயின் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதற்குள், அவரை தள்ளிவிட்டு பெண்கள் வேகமாக சென்று விட்டனர்.இதுகுறித்து பதிபூரணம், திருப்போரூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் இருந்த கேமரா காட்சிகள் மூலம் மர்ம பெண்களை தேடி வருகின்றனர்.

nபெரும்புதூர்: பெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டை கூட்டுச் சாலையில் ஸ்ரீபெரும்புதூர் எஸ்ஐ சுரேஷ் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போந்தூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் நோக்கி அடுத்தடுத்து 2 லாரிகள் வந்தன. அந்த லாரிகளை மறித்தனர். போலீசாரை கண்டதும், டிரைவர்கள் தப்பியோட முயன்றனர். உடனே ஒருவரை மடக்கி பிடித்தனர். மற்றொருவர் தப்பிவிட்டார். அதில், போந்தூர் ஏரியில் இருந்து திருட்டு மண் கொண்டு வந்தது தெரிந்தது. இதையடுத்து 2 லாரிகளையும் பறிமுதல் செய்து, காவல் நிலையம் கொண்டு சென்றனர். தொடர்ந்து போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். தப்பியோடிய லாரி டிரைவர் மற்றும் உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : customs charter ,
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி...