தூத்துக்குடி: தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரியில் மனித உரிமைகள் குறித்து பன்னாட்டு அளவிலான கருத்தரங்கு நடந்தது. தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரியில் வரலாற்றுத்துறை முதுகலை மற்றும் ஆராய்ச்சி பிரிவு சார்பில் மனித உரிமைகள் மீறல், பரிமாணம் மற்றும் சமூக பாதுகாப்பு தொடர்பாக பன்னாட்டு அளவிலான கருத்தரங்கு நடந்தது. தலைமை வகித்த கல்லூரி முதல்வர் வீரபாகு, விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டுப் பேசினார். தூத்துக்குடி சார்பு நீதிபதி சாமுவேல் பெஞ்சமின், கருத்தரங்கை துவக்கிவைத்துப் பேசினார். பேராசிரியர் சாலமோன் பெர்னாட்ஷா, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை முன்னாள் தலைவர் மரியஜான், சாயர்புரம் போப் கல்லூரிப் பேராசிரியர் தினகரன் வாழ்த்திப் பேசினர்.
இலங்கையில் உள்ள தென்கிழக்கு பல்கலைக்கழக சமூக அறிவியல் துறை தலைவர் அனுசியா, மனித உரிமைகள் மீறல்களால் ஏற்படும் விளைவுகள் மற்றும் பாதிக்கப்பட்டோர் சமுக பாதுகாப்பை மேற்கொள்வது குறித்து விளக்கினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர். பேராசிரியர் பாரதி நன்றி கூறினார். ஏற்பாடுகளை பேராசிரியர் சவுந்திரராஜன் தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.