கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை இயக்குநர் திடீர் ஆய்வு செய்தார். சேலத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி கள்ளக்குறிச்சி வழியாக சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு பணிதுறை இயக்குநர் சைலேந்திரபாபு கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்தில் நேற்று திடீர் ஆய்வு செய்தார். தீயணைப்பு நிலைய வளாகத்தில் வைக்கப் பட்டு இருந்த உபகரணங்கள் புயல் வெள்ளம், மற்றும் கனமழை நேரங்களில் பேரிடர் காலங்களில் பயன்படுத்த கூடிய மீட்பு உபகரணங்கள் சரியாக பராமரிக்கப்படுகின்றதா? என்பது குறித்து முதலில் ஆய்வு மேற்கொண்டார். அதாவது மரம் வெட்டும் இயந்திரம், நீர் மூழ்கி கருவி, இரவு நேரங்களில் மின் தடையின்போது பயன்படுத்த கூடிய அஸ்கா லைட் ஆகிய உபகரணங்கள் அனைத்தும் பயன்பாட்டில் உள்ளதா என்பதனை உறுதிப்படுத்த செய்முறை விளக்கத்தின் மூலம் ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின்னர் தீயணைப்பு வாகனங்கள் சரியான முறையில் இயக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய அந்தந்த வாகனங்களை ஓட்டுநர்கள் மூலம் இயக்க கூறினார். அதனை தொடர்ந்து அலுவலக ஆவணங்களை ஆய்வு பணிகளை மேற்கொண்டார். அப்போது விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட தீயணைப்பு அலுவலர் (பொறுப்பு) முகுந்தன், கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடன் இருந்தனர்.