பள்ளிப்பட்டு: ஊரக உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தல் நடத்தும் உதவி தேர்தல் அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இம்மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. வரும் வெள்ளிக்கிழமை முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில், ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் தேர்தல் பணிகள் தொடர்பாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு கலந்தாய்வுக் கூட்டம், வட்டார வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கலந்தாய்வுக் கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் அ.நடராஜன் பங்கேற்று தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தேர்தல் பணிகளில் ஈடுபடுவது குறித்தும் அச்சமின்றி, நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் செயல்பாடுகள் குறித்து விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தங்கவேலு, கே.கலைச்செல்வி, மோகனரங்கம், ஏ.செல்வம், அகஸ்டியன்ராஜ், அண்ணாமலை ஆகியோர் பங்கேற்று தேர்தல் குறித்து விளக்கி பேசினர்.
தேர்தல் பணிகளில் கட்சிகள் தயக்கம்
உள்ளாட்சி தேர்தலுக்கு தேதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்ய இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது. இந்நிலையில், தேர்தல் பணிகளில் ஈடுபடுவதில் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் சுணக்கம் காட்டி வருகின்றனர்.
இதனால், கிராம பகுதிகளில் காணப்படும் தேர்தல் பரபரப்பு இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறாமல், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, நகர்புறங்களுக்கு தனித் தனியாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேதல் தொடர்பாக வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கடந்த உள்ளாட்சி தேர்தல்போல் இம்முறையும் கடைசி நேரத்தில் நீதிமன்றம் தேர்தல் ரத்து செய்யும் என்று எதிர்பார்ப்பு நிலவி வருவதால் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் தேர்தல் பணியில் ஈடுபட தயக்கம் காட்டி வருகின்றனர்.