கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் கடையின் சுவரில் துளைபோட்டு பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை - சத்தியவேடு சாலையில் அரசு மதுபான கடை உள்ளது. இந்த கடையில் முத்துரெட்டி கண்டிகை பகுதியை சேர்ந்த விஜயகுமார் மேற்பார்வையாளராக பணியாற்றுகிறார். அவரோடு சுதாகர், திருஞானம், சீனு ஆகியோரும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். நள்ளிரவு 1 மணி அளவில் திடீரென டாஸ்மாக் கடையில் இருந்து கவரபேட்டை கவல் நிலையத்தில் எச்சரிக்கை மணி ஒலித்தது. உடனே போலீஸ் எஸ்ஐ மகாலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் கடையின் பின்பக்க சுவரை உடைத்துகொண்டிருந்த மர்ம நபர்கள் ஆயுதங்களை அப்படியே போட்டுவிட்டு அருகில் இருந்த ஏரியில் குதித்து தப்பியோடிவிட்டனர். அவர்களை பிடிக்க போலீசார் துரத்தி சென்றும் யாரும் சிக்கவில்லை.
இதையடுத்து டாஸ்மாக் கடையை சுற்றி ஆய்வு செய்தனர். அப்போது, சுவரில் துளை போடுவதற்கு முன் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அதன்பின் கடப்பாறையை வைத்து ஒரு அடி அகலத்தில் சுவரில் துளையிட்டிருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து மேற்பார்வையாளர் விஜயகுமாருக்கு தொலைபேசி மூலம் போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வந்த அவர், கடையில் இருப்பு வைத்திருந்த மதுபானங்கள் மற்றும் கல்லாபெட்டியில் இருந்த பணத்தை சரிபார்த்தார். அப்போது கல்லாவில் இருந்த 20 ஆயிரம் காணாமல் போனது தெரியவந்தது. 11 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் அப்படியே இருந்தது.
இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். டாஸ்மாக் கடையை சுற்றி பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், மூன்று பேர் முகமூடி அணிந்து கொண்டு சுவரை துளையிடும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அவற்றை பெற்று மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மற்ெறாரு சம்பவம்: கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (48). நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் இவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 5 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து புகாரின்பேரில் கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.