×

இலவச வீடு கட்டித்தருவதாக மோசடி பாதிரியாருக்கு 4 ஆண்டு சிறை குடியாத்தம் கோர்ட் தீர்ப்பு

குடியாத்தம், டிச.4: இலவச வீடுகள் கட்டித்தருவதாக கூறி ₹8 லட்சம் மோசடி செய்த பாதிரியாருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து குடியாத்தம் கோர்ட் தீர்ப்பளித்தது. வேலூர் மாவட்டம், அரியூர் கிராமத்தை சேர்ந்தவர் யோபு சரவணன், பாதிரியார். இவர் ஒரு அறக்கட்டளை நடத்தி வருகிறார். கடந்த 2005ம் ஆண்டு அறக்கட்டளை மூலம் வீடுகள் கட்டித்தருவதாக விளம்பரம் செய்தார்.இதனை கண்ட குடியாத்தம் அசோக்நகரை சேர்ந்த ராஜேந்திரன், நடுப்பேட்ைட பகுதியை சேர்ந்த தயாளன் ஆகியோர், அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் வீடு கட்டித்தருவதாக கூறி பலரிடம் பணத்தை வசூலித்து கடந்த 2005ம் ஆண்டு அக்டோபர் மாதம் ₹4 லட்சத்தை யோபு சரவணனிடம் கொடுத்துள்ளனர்.ஆனால், யோபு சரவணன் வீடு கட்டி தராமல் காலம் கடத்தியுள்ளார். இதையடுத்து பணத்தை திருப்பிக்கேட்டபோது 2006ம் ஆண்டு யோபு சரவணன் ₹4 லட்சத்திற்கான காசோலையை ராஜேந்திரன், தயாளனிடம் கொடுத்தார். அந்த காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பிவிட்டது.

இதனால், தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த ராஜேந்திரன், தயாளன் ஆகியோர் 2007ம் ஆண்டு குடியாத்தம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த மாதம் 28ம் தேதி விசாரணைக்கு வந்தது.வழக்கை நீதிபதி செல்லபாண்டியன் விசாரித்து யோபு சரவணனுக்கு 2 ஆண்டு சிறை, ₹8 லட்சம் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும். அவ்வாறு, பணம் வழங்க தவறினால் மேலும் 6 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு கூறினார்.இதேபோல், குடியாத்தம் பகுதியை சேர்ந்த பாண்டியன், வாசு, ஆனந்தன் ஆகியோரிடமும் வீடு கட்டித்தருவதாக கூறி யோபு சரவணன் ₹4 லட்சம் ஏமாற்றியதாக குடியாத்தம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கும் விசாரணைக்கு வந்தது.விசாரித்த நீதிபதி, 2 ஆண்டு சிறை, ₹8 லட்சத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு திருப்பி தர வேண்டும் தவறும் பட்சத்தில் மேலும் 6 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

Tags : priest ,house ,
× RELATED கோயில் திருவிழாவில் தீச்சட்டி ஊர்வலத்தில் பூசாரி உயிரிழப்பு