விருதுநகர், டிச. 3: விருதுநகர் ரோசல்பட்டி ஊராட்சியில் உள்ள என்.டி.முருகன் நகரில் போதிய வாறுகாலின்றி மர்மக்காய்ச்சல் பரவுவதாக பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். விருதுநகர் ரோசல்பட்டி ஊராட்சியிள்ள உள்ள என்.டி.முருகன் நகர் மற்றும் ஆர்.வி.ஆர் நகர் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ரோசல்பட்டி ஊராட்சியில் உள்ள என்.டி.முருகன் நகர் மற்றும் ஆர்.வி.ஆர்.நகரில் 200க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இந்த பகுதிகளில் போதிய கழிவுநீர் வாறுகால், குடிநீர் வசதியில்லை. தெருவிளக்கு, ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை.
வாறுகால் இல்லாததால் சாலைகளில் கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தி அதிகரித்து மலேரியா, டெங்கு மற்றும் மர்மக்காய்ச்சல் பரவி வருகிறது. ரோடுகள் இல்லாததால் குடியிருப்புவாசிகள், குழந்தைகள் வீட்டைவிட்டு வெளியே வந்து செல்ல முடியவில்லை. தெருவிளக்கு இல்லாததால், இரவு நேரங்களில் தெருக்களில் சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடந்து வருகின்றன. இதனால், வீடுகளில் குடியிருக்க அச்சமும், மனஉளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர். எனவே, கலெக்டர் தலையிட்டு அடிப்படை வசதிகள் செய்து தர உத்தரவிட வேண்டும்’ என தெரிவித்துள்ளனர்.