திருச்செந்தூர், டிச. 3: குரும்பூர் பகுதியில் பெய்த மழையால் நிரம்பிவழிந்த நாலாயிரமுடையார் குளத்து நீர் குடியிருப்புக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பரிதவிக்கின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சிலதினங்களாக பெய்த கனமழையால் குரும்பூர் அருகே சோனகன்விளை அடுத்து நாலாயிரமுடையார்குளம் நிரம்பியது. இதனால் அதில் இருந்து வெளிேயறிய தண்ணீர் அதன் அருகே கரையில் உள்ள குடியிருப்புகளில் புகுந்தது. இதனால் அங்கு வசித்து வரும் மக்கள் பரிதவிக்கின்றனர். இதனிடையே ஏற்கனவே வேளாண் பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டியிருந்த நிலையில், தொடர்ந்து பெய்த கனமழையால் நெல் நாற்றுகள் தண்ணீரில் மிதந்தன. ஒரு சில பகுதிகளில் தண்ணீர் வடியத் துவங்கியதால் அந்த நாற்றுகள் தப்பின. சில பகுதிகளில் தண்ணீர் வடியாததால் நாற்றுகள் தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன. மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளதால் விவசாயிகள் பீதியில் உள்ளனர். இதுவரை பெய்த மழைக்கே அனைத்தும் குளங்களும் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் மேலும் இப்பகுதியில் கனமழை பெய்தால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.