×

திறந்தவெளி, கட்டுமான இடங்கள், வீடுகளில் கொசு உற்பத்தி கண்டறியப்பட்டால் 2 மடங்கு அபராதம் விதிக்கப்படும்

சென்னை, டிச.3: தொடர் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்கள் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 500க்கும் மேற்பட்டோர் டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்றுவருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் மாநகராட்சி சுகாதாரத்துறை துறை ஆணையர் மதுசுதன் ரெட்டி, மத்திய வட்டார துறை ஆணையர் ஸ்ரீதர், வடக்கு வட்டார துணை ஆணையர் ஆகாஷ், மாநகர நல அலுவலர் செந்தில்நாதன், கூடுதல் மாநகர நல அலுவலர்கள், மண்டல நல அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில்,சென்னை மாநகராட்சி பகுதியில் 6,913 பூட்டிய வீடுகளும், 25,287 திறந்தவெளி இடங்களும் 7,661 கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ெகாசு உற்பத்திக்கு காரணமான நிறுவனங்களுக்கு இதுவரை ₹38 லட்சத்து 96 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இதை தொடர்ந்து கொசு உற்பத்தியாகும் நிலையில் உள்ள காலியிடங்களை சுத்தப்படுத்த, சம்பந்தப்பட்ட நில உரிமையாளருக்கு அறிவுறுத்த வேண்டும். அவர் சுத்தப்படுத்தாவிட்டால் மாநகராட்சி சார்பில் சுத்தப்படுத்தி அதற்கு வழக்கமாக மாநகராட்சி தரப்பில் வசூலிக்கப்படுவதை விட 2 மடங்கு கட்டணம் அபராதமாக வசூலிக்க வேண்டும் என்று ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டார்.மேலும் வீடுகள், கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் கொசு உற்பத்தியாவது தெரிந்தால், கடும் அபராதம் விதிக்க வேண்டும். பூட்டி உள்ள வீடுகளை கண்டறிந்து அவற்றை தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Tags : construction sites ,spaces ,houses ,
× RELATED கொடைக்கானல்: மரம் விழுந்ததில் 2 வீடுகள் சேதம்