பொன்னேரி, டிச. 3: மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் இரவு நேரத்தில் தனியாக செல்லும் ஆண்கள் மற்றும் பெண்களை குறிவைத்து செல்போன், பணம் வழிப்பறியில் மர்ம நபர்கள் ஈடுபடுவதாக திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அரவிந்தனுக்கு தொடர் புகார்கள் வந்தன.அவரது உத்தரவின் பேரில் பொன்னேரி எஸ்பி பவன்குமார் ரெட்டி மேற்பார்வையில் மீஞ்சூர் இன்ஸ்பெக்டர் மதியரசன் தலைமையில் எஸ்.ஐ விஷ்ணு மற்றும் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் நேற்றுமுன்தினம் அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அத்திப்பட்டு புதுநகர் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் அமர்ந்து மூன்று நபர்கள் மது அருந்திக்கொண்டிருந்தனர். அவர்களை குற்றப்பிரிவு போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். இதில், போரூர் ஐயப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்த சத்யா (19), சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த பிரசாந்த் (22), எர்ணாவூர் பகுதியைச் சேர்ந்த சமீர் (29) என்பதும், தனியாக நடந்து செல்பவர்களை வழிமறித்து நகை, பணம் பறிப்பதை தொழிலாக கொண்டவர்கள் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் வைத்திருந்த 8 செல்போன்கள், ரூ. 2000 ம் மதிப்புள்ள நாணயங்கள், ஸ்பீக்கர், ஹெட்போன் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். மேலும் மூன்று பேரையும் போலீசார் கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.