அன்னூர், டிச. 1: அன்னூர் பேரூராட்சியில் கோவை செல்லும் சாலையில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. தற்போது காலநிலை மாற்றம் காரணமாக வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளில் மக்கள் திண்டாடி வருகின்றனர். இதனால் நாள்தோறும் இம்மருத்துவமனைக்கு 600க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். ஆனால் இந்த மருத்துவமனையில் ஒரு தலைமை மருத்துவர் உள்பட 6 மருத்துவர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 2 மருத்துவர்கள் பல நேரங்களில் அரசு சார்பில் நடைபெறும் மருத்துவ முகாமிற்கு சென்று விடுவதாக கூறப்படுகிறது. இதனால் நோயாளிகள் சிகிச்சை பெற நீண்டநேரம் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே அன்னூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர், எக்ஸ்ரே டெக்னீசியன்கள், என தேவைக்கேற்ப கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மருத்துவமனைக்கு ஜெனரேட்டர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.