×

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ ரூ.2,555க்கு விற்பனை

சத்தியமங்கலம், டிச. 1:   வளர்பிறை முகூர்த்த சீசனையொட்டி சத்தியமங்கலம்  பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ ரூ.2555க்கு விற்பனையானதால் விவசாயிகள்  மகிழ்ச்சியடைந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார  பகுதிகளில் உள்ள சிக்கரசம்பாளையம், புதுவடவள்ளி, ராஜன் நகர், பவானிசாகர்,  இக்கரை தத்தப்பள்ளி, தாண்டாம்பாளையம், கெஞ்சனூர் உள்ளிட்ட 100க்கும்  மேற்பட்ட கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லிகை  பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் மல்லிகை பூக்களை பறித்து  சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று ஏல முறையில் விலை  நிர்ணயம் செய்யப்படுகிறது. ஏலம் எடுத்த வியாபாரிகள் பூக்களை ஈரோடு, கோவை,  திருப்பூர், மைசூர், பெங்களுரு, ஐதராபாத்,  கொச்சின், எர்ணாகுளம், திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்.  தற்போது கார்த்திகை மாதம் வளர்பிறை  முகூர்த்த சீசன் என்பதால், மல்லிகை பூவின் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம்  கிலோ ரூ.600க்கு விற்ற மல்லிகை, நேற்று ரூ.1050 முதல் ரூ.2,555 வரை  விற்பனையானது. இதேபோல் கடந்த வாரம் சம்பங்கி கிலோ ரூ.50க்கு விற்பனையான  நிலையில் நேற்று ரூ.140க்கு விற்பனையானது. பூக்களின் விலை உயர்வால் மலர்  சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Sathyamangalam ,
× RELATED சத்தியமங்கலம் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி