×

சிறுமிக்கு பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை

ஈரோடு,  டிச. 1:  சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சமையல் தொழிலாளிக்கு 7 ஆண்டு  சிறை தண்டனை விதித்து ஈரோடு மகிளா கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.  ஈரோடு  மாவட்டம் சத்தியமங்கலம் கள்ளிப்பட்டி நல்லசாமி வீதியை சேர்ந்த அபிபுல்லா  மகன் சாரு (24). சமையல் தொழிலாளி. இவர் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ம் தேதி  சத்தியமங்கலம் பகுதியில் ஒரு வீட்டின்  முன் விளையாடிக்கொண்டிருந்த 10வயது சிறுமியின் அருகில் சென்றார். சிறுமியிடம்  யார் நீ? என விசாரித்து பேசினார். அதற்கு அச்சிறுமி எனக்கு உடல் நிலை  சரியில்லாததால், தனது பாட்டியின் வீட்டுக்கு வந்திருப்பதாகவும், எனது  பாட்டி வங்கி வரை சென்றுள்ளதாகவும் கூறியுள்ளார். சிறுமி தனியாக  இருப்பதை அறிந்துகொண்ட சாரு, சிறுமியை வீட்டிற்குள் அழைத்து  சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். ஆசைக்கு இணங்காவிட்டால் கொலை செய்து  விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

வெளியே சென்றிருந்த சிறுமியின் பாட்டி  திடீரென்று வீட்டுக்கு வந்தார். அப்போது சாரு வீட்டினுள் இருப்பதை பார்த்த அவர் கூச்சல்போட்டார். இதையடுத்து சாரு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து,  சாருவை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை ஈரோடு மகிளா கோர்ட்டில்  நடந்து வந்தது. ஜாமீனில் வெளிவந்த சாரு திடீரென தலைமறைவானார்.
இதையடுத்து  கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து சாருவை மீண்டும் போலீசார் கைது செய்து, கோர்ட்டில்  ஆஜர்படுத்தினர்.
 இந்நிலையில், ஈரோடு மகிளா கோர்ட் நீதிபதி மாலதி,  வழக்கின் இறுதி விசாரணை முடித்து நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார். அதில்,  போக்சோ சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் குற்றஞ்சாட்டப்பட்ட சாருவுக்கு 7  ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 6 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.  அரசு தரப்பில் வக்கீல் சுமதி ஆஜரானார்.

Tags : jail ,child molestation worker ,
× RELATED பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு..!!