ஈரோடு, டிச. 1: ஈரோடு கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ். நகர் மரப்பாலம் 5வது வீதியை சேர்ந்த பழனிச்சாமி மகள் வினோதினி (25). இவருக்கும் ஈரோடு லக்காபுரம் முத்துக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்த தறிபட்டறை தொழிலாளியான அண்ணாதுரை மகன் வெற்றிவேல் (27) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக வினோதினி, வெற்றிவேலை பிரிந்து, அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், வெற்றிவேல் கருங்கல்பாளைத்தில் வசிக்கும் வினோதினி வீட்டிற்கு கடந்த 28ம் தேதி சென்று, மனைவியை தன்னுடன் வாழ வருமாறு அழைத்தார். ஆனால், வினோதினி மறுப்பு தெரிவித்தார்.
இதனால் வெற்றிவேல் ஆத்திரமடைந்து வினோதினியை தகாத வார்த்தையால் பேசி, ரோட்டில் வைத்து அடித்து உதைத்தார். மேலும், என்னுடன் வாழவில்லை என்றால் அடித்து கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். இது குறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் வினோதினி அளித்த புகாரின் பேரில், வெற்றிவேல் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து, நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.